தலைவர் அண்மையில் இல்லாத நிலையில் வரும் மூன்றாவது மாவீரர் நாள் இன்று. இந்த மாவீரர் நாள் முந்தைய இரு மாவீரர் நாள் வந்த காலங்களை விட வேறுபட்டதாக இருக்கிறது. முத்தைய இரு ஆண்டுகளும் கே.பி, மற்றும் நாடு கடந்த தமிழிழ அரசு என்ற இரு பரபரப்பு செய்திகளுடன் கடந்து சென்றிருக்க, இந்த ஆண்டு (தலைவர் அண்மையில் இல்லாத) மூன்றாவது மாவீரர் நாள் பல புதிய வாசல்கள் திறக்கப்பட்ட வேளைகளில் வந்திருக்கிறது. அந்தப் புதிய வாசல்களாவன:
ஐ.நா. போர்க்குற்ற அறிக்கை வெளியானது, துரோகி கருணாநிதி தேர்தலில் தோற்றோடியது, வெளிநாடுகளில் ராஜபக்சேயின் வருகைகள் ரத்தானது – தமிழர்களின் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது, தமிழகத்தில் 80-களில் இருந்ததைப் போல தமிழ் தேசிய எழுச்சி ஏற்பட்டு வருவது, அதனால் மூவர் தூக்குத் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது, ஈழத்தில் கிரீஸ் பூதங்களின் முயற்சி மக்கள் போராட்டங்களின் முன் தோல்வியடைந்திருப்பது, அங்கு மக்கள் எழுச்சி பலகோணங்களில் ஏற்பட்டுக் கொண்டே இருப்பது – மக்கள் ராணுவத்தோடு சில இடங்களில் மோதியது, யாழ் பல்கலையில் தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களை தலைவர் பிறந்த நாளில் கலந்து கொள்ள வற்புறுத்தியது…இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
மேற்கண்டவற்றில் முதல் நான்கும் தமிழகத்தின் மூலமாகவும், மற்றவை ஈழ மக்கள் மூலமாகவும் நிறைவேறியிருக்கின்றன. இவை உணர்த்தும் முதல் செய்தி என்னவெனில் தமிழகமும், ஈழமும் தத்தம் தாயக மண்ணில் அசைவற்றுக் கிடக்க வில்லை என்பதே. அதிலும், ஈழச் சொந்தங்கள் போருக்குப் பின் எதுவும் பேச முடியாத நிலையில் தள்ளப்பட்டார்கள் என்ற பேச்செல்லாம் பறந்து போய், கிரீஸ் பூதங்களைத் தோற்கடித்து வீதிப்போராட்டங்களை நடத்தும் வலுவுடன் வெளி வருகின்றனர் என்பது மகிழ்சிகரமான விடயம்.
இந்த மகிழ்சிகளினூடே மற்றொரு மகிழ்சியும் வந்து சேர்ந்திருக்கிறது. இந்திய நடுவணரசானது இலங்கைப்படையினரால் கடலில் தாக்கப்படும் தமிழக மக்களை காப்பாற்ற முடியாது என வெளிப்படையாக அறிவித்து விட்டது. இந்த மகிழ்சிதான் மற்றெந்த மகிழ்ச்சியை விடவும் முக்கியமானது. ஏனெனில் ‘தமிழக மக்களே இனி இந்தியா உங்கள் நாடு இல்லையென்றும், இந்திய ராணுவம் உங்களுக்கானது இல்லை’ என்றும் விளங்காதவர்களுக்கும் விளங்க வைக்கும் அறிவிப்பு இது. தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டுக்குமான நீண்ட காலமாக தொடர்ந்து வரும் ஒரு உளவியல் போர்க்களம் இந்த வெளிப்படையான அறிவிப்பின் மூலம் திடப்பட்டிருக்கிறது.
இந்தப் புள்ளியிலிருந்து தமிழகத் தமிழர்கள் எங்கு போக வேண்டும் என்பது தமிழ் தேசிய ஆற்றல்களுக்கு விளங்கியிருக்கும். அது ஈழ விடுதலைக்கு உந்து சக்தியாக இருப்பதன் விளைவாக தமிழகத்தில் தமிழ் தேசிய விடுதலை நெருப்பை வளர்ப்பதுதான். அதேவேளையில் புலம்பெயர்த் தமிழர்களின் போராட்ட வலுவே தமிழ்தேசியத் தீயை தமிழகத்தில் பற்றி எரியவைத்தும், தாயக ஈழ மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஊட்டி அவர்களை அசைவற்றுப் போக விடாமல் செய்து, செயல்படத் தூண்டி இந்த ஆண்டின் புதிய வாசல்களைத் திறந்து விட்டிருக்கிறது.
இச்சூழலில் நம்முன் உள்ள கடமைகள் மூன்று: 1) புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை பன்மடங்கு பெருக்குவது, 2) மீண்டும் வீதிக்கு இறங்கி போராட முன்வரும் தாயக மக்களை வெளியிலிருந்தும் ஊக்குவிப்பது, 3) ஈழ விடுதலையை தமிழகத்தில் முன்னெடுப்பதும், தமிழக தேசிய விடுதலை போக்கை அதில் இணைப்பதும். இவையே இந்த ஆண்டின் மாவீரர் நாளினையொட்டி திறந்திருக்கும் புதிய வாசல்கள் நமக்குக் காட்டும் பாதைகள்.
நிலவரசுக் கண்ணன்
Filed under: உலகத் தமிழர் களம் குறிச்சொற்கள்: | eelam,maaveerar day,nilavarasu,pachchaiman,pirabakaran,tamilnadu




