முள்ளிவாய்க்காலின் ரத்த சோகத்துக்குச் சொந்தமானவர்கள் தங்கள் தவப்புதல்வர்களின் ஈகையை இன்று ஐ.நா. அறிக்கை வடிவிலும், உலகத்தின் பெருகி வரும் போர்குற்றச்சாட்டிலும் பார்க்கின்றனர்.
இந்த உலகப்போக்கு அடுத்தகட்டத்தை அடைய வேண்டும். அதாவது ‘போர்க்குற்றம்’ என்ற உலகச் சொல்லாடல் ‘இனப்படுகொலை’ என்ற சொல்லாடலாக மாற வேண்டும். இந்தியாவின் நடுவணரசு இலங்கையிடம் மென்மைப் போக்கினை கைவிட்டு ஓரளவேனும் கடுமை அல்லது நடுநிலைப் போக்கை காட்ட வேண்டும். இதுதான் அடுத்த கட்டம் என்பது. மேற்கண்ட இரண்டையும் (‘போர்க்குற்றம்’ என்பது ‘இனப்படுகொலை’ என மாறுவது, இந்தியா கடுமை அல்லது நடுநிலையைக் கையாள்வது) சாதித்தால் அதனைத் தொடர்ந்து மூன்றாவதாக தமிழீழத்திற்கான வாக்கெடுப்பை உலக அரங்கில் முன்வைத்து அழுத்தம் கொடுக்கும் காலம் தோன்றி விடும்.
முதல் இரண்டையும் நிறைவு செய்வோமா?
இன்றை சூழல்
ஈழத்தமிழர் பிரச்சினை பலவகைகளிலும் உலகத்தமிழர்கள், இந்தியா, தமிழக அழுத்தம் ஆகிய மூன்றையுமே சுற்றி கிடந்து வருகிறது. தாயகத்தின் சூழல் ராணுவ அடக்குமுறைக்குள் சிக்குண்டு தவிக்கையில், உலகத்தமிழர்கள், தமிழகம், இந்தியம் ஆகியவற்றை பயன்படுத்தியே ஈழம் தொடர்பில் நாம் எதனையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
முன்பை விட, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் சர்வதேசச் சூழலோடு தமிழகச் சூழல் ஒத்திசைந்து செல்கிறது. தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புக்களும் அதன் பின் ஒன்று திரண்டு நிற்கின்றன. இரண்டக நிலையெடுத்த தி.மு.க. கூட வேறு வழியின்றி – தன் பெயர் எங்கே அடிபட்டு விடுமோவென்ற அச்சத்தில் – தீர்மானத்தை ஆதரித்தும், போர்க்குற்றவாளிகளை அனைத்துலக நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டுமென்றும் கூறி வருகிறது.
அதே வேளையில் இது வரை இல்லாத வியப்பாக, அனைத்திந்திய அளவில் பல்வேறு கட்சிகளும் தமிழகத்தின் பின் திரண்டுள்ளன. இன்று தொடங்கும் இந்திய நாடளுமன்ற கூட்டத்தொடரில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப பா.ஜனதா முடிவு செய்துள்ளது. அதன் தலைவர் அத்வானி வீட்டில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்குப்பின், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் இவ்வாறு கூறியிருக்கிறார். அதுபோல் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது என இடது கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரது கூறியிருக்கிறார். இடது கம்யூனிஸ்ட் கட்சி சென்னையில் இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வலியுறுத்தி 30.07.2011 அன்று சிறப்பு மாநாடு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வலது கம்யூனிஸ்ட் கட்சியும் தன் பங்கிற்கு குரல் கொடுத்துள்ளது. அக்கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக சம உரிமை வழங்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் சொந்த இல்லங்களுக்குச் சென்று புதிய வாழ்க்கையைத் தொடங்க இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசால் அளிக்கப்படும் உதவிகள் அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். இந்தப் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன் வைத்து விவாதிக்க உள்ளோம் என்று டி.ராஜா தெரிவித்தார். மேலும், தென்னிந்திய நடிகர் சங்கமும் போர் குற்றம் புரிந்த இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க கோரியும், கச்சத்தீவு பிரச்சினையால் பாதிக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க ஒரே வழி, கச்சத்தீவை மீண்டும் இந்திய அரசு தன் வசம் மீட்பதுதான் என்று போராடி வரும் தமிழக அரசுக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் துணை நிற்கும் என்றும் அமெரிக்காவில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஹிலாரி கிளிண்டன், தமிழக முதல் அமைச்சரை நேரில் சந்தித்த சரித்திர நிகழ்வு நடைபெற்றதற்கும், அதன் தொடர்ச்சியாக, போர் குற்றம் புரிந்த இலங்கை அரசு மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததற்கு அடித்தளம் அமைத்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்நிகழ்வுப்போக்குகள் யாவும் காட்டுவதென்னவெனில் இந்திய அளவில் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படப் போவது உறுதி என்பது தெரிந்து விட்டது, எனவேதான் அனைத்துக் கட்சிகளும் அமைப்புக்களும் தன் குரல் வரலாற்றில் பதியப்படவேண்டுமே என்று களத்தில் குதித்துக் கொண்டிருக்கின்றன. பல்வேறு கட்சிகளுக்கும் அமைப்புக்களுக்கும் தெரிந்த இவ்வுண்மை இந்திய அரசுக்கு மட்டும் தெரியாதா? தெரியும் என்பது வெள்ளிடை மலை. ஆயின், போர்க்குற்ற வாளிக்கு உடந்தை தான் என்பதாலும், ராஜபக்சே சீனாவின் பக்கம் ஒரேயடியாகச் சாய்ந்து விடாமலிருக்கவும் (அது ஏற்கனவே அப்படித்தான் போய்க்கொண்டிருந்தாலும் இலங்கையைத் தன்பக்கம் இருப்பது போல் காட்டிக்கொள்ளவுமே) இந்தியா தனது இலங்கை ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறது. தமிழக, இந்திய மாறிவரும் நிகழ்வுப்போக்கினை மறைத்து உலகின் கண்களுக்கு வேறு மாதிரியான சித்திரத்தைக் காட்டி விடலாமென்றே இலங்கை மகிந்தா ராஜபக்சேவின் சகோதரரும், அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்சே தலைமையிலான இலங்கை நாடாளுமன்ற குழுவினர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர்.
ஆனால் நாடாளுமன்றிலும் தமிழக உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பை அவர்கள் சந்தித்தது உலகில் மற்ற நாடுகளில் இலங்கை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் சந்தித்து வரும் எதிர்ப்பை இங்கும் பதிவு செய்துள்ளது.இனப்படுகொலையை நடத்திய ராஜபக்சேவையோ அல்லது அவரது நாட்டின் தலைவர்களையோ உலகின் எந்த நாடும் வரவேற்பதில்லை. இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் சென்றபோது, அங்குள்ள தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து அவரை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க இங்கிலாந்து மறுத்துவிட்டது. அதுமட்டுமின்றி ராஜபக்சே எவ்வளவோ முயன்றும் அவரை சந்திக்க இங்கிலாந்து தலைவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அவர் பாதியிலேயே அங்கிருந்து வெளியேற நேரிட்டது. அதேபோல் ராஜபக்சே அமெரிக்கா சென்றால் அவரைக் கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றமும், காவல்துறையும் காத்திருக்கின்றன.
இந்தியா என்னதான் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயன்றாலும், உலகிலும், இந்தியத்திலும் பெருகி வரும் எதிர்ப்புக்கள் அதன் முயற்சியை முறியடித்து வருகின்றன. எல்லாவற்றையும் பெரிய தலைவலியாக இந்திய அரசுக்கு வந்து சேர்ந்திருப்பது தமிழக முதல்வரின் பிடிவாதக் குணம். போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும், பொருளாதாரத்தடை விதிக்க வேண்டுமென்றும், நாடாளுமன்றில் தன் கட்சி உறுப்பினர்கள் இப்பிரச்சினையை எழுப்பவிருப்பதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். இவ்விடையத்தில் ஹிலாரி கிளிண்டன் தனக்கு நல்ல ஆதரவை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.
இனி வருவது
உலகச் சூழலோடு தமிழகம் ஒத்திசைந்து கொந்தளிப்பது, அதற்கு அனைத்திந்திய கட்சிகளின் ஆதரவு கிடைத்திருப்பது இந்திய அரசை ஒரு முச்சந்தியில் நிறுத்தி வைத்திருக்கிறது. அதே வேளையில் தமிழகத் தமிழர்களையும், உலகத் தமிழர்களையும் அதே முச்சந்தியில் நிறுத்தியுள்ளது என்று சொல்லலாம். இந்த முச்சந்தியிலிருந்து நாம் எந்தப்பக்கம் நகரப்போகிறோம்? கீழ்கண்ட வழி தென்படுகிறது.
முதல் வழியில் தமிழகம் இன்னமும் தனித் தனி அமைப்புக்களாக குரல் கொடுப்பதை நிறுத்தி விட்டு, ஒரு பொது அமைப்பைக் காண வேண்டும். ஈழத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு ஏதோவோர் நோக்கில் பொது அமைப்பாக இருந்தமையினாலேயே அணமைய தேர்தலில் தமிழர்கள் தங்கள் விருப்பத்தை பதிவு செய்ய முடிந்தது. அதுபோல் ஒரு பொது அமைப்பு – தமிழ் தேசிய கூட்டைமைப்பாக இயங்கினாலே அனைத்துத் தமிழர்களையும் ஒன்றிணைத்து வெகுமக்கள் குரலாக பரிணமிக்க முடியும். அதுவே காங்கிரசு போன்ற ஆற்றல்களை தனிமைப்படுத்த உதவும். அதுவே உலகத் தமிழர்களை எம்மவர்களுடன் இணைந்து செயல்பட வைக்கும்.
அதாவது எடுத்துக்காட்டிற்குச் சொன்னால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது தமிழக ஒன்றித்த அமைப்பொன்று இருந்தால் அதன் கண்டனம் வெளிநாடுகளிலெங்கும் உலகத்தமிழர்களால் உயர்த்திப்பிடிக்கப்படும். அதுபோல் தமிழகத்தின் ஈழ ஆதரவுக் கோரிக்கையை, போராட்டத்தை உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் எதிரொலிக்கும் போது அதன் வீச்சு பலமடங்காகும். இது இலங்கை அரசின் மீதான குற்றச்சாட்டை மேலும் உலகிற்கு வெட்ட வெளிச்சமாக்கி திட்டமான நடவடிக்கையை உலகிடம் கோர வழிகோலும். அதுவே இந்தியாவின் கையாலாகத் தன்மையை உலகம் முழுதும் தெட்டத்தெளிவாக்கி இந்திய அரசின் போக்கின் மீது அழுத்தம் செலுத்தும். இந்தியாவின் போக்கு மாறாவிட்டாலும், அதன் போக்கு உலகில் மேலும் மேலும் அம்பலமாகும் – ஒன்றித்த தமிழக கூட்டமைப்பால், அது உலகத்தமிழர் அமைப்புக்களோடு இணைந்து குரல் கொடுப்பதால்.
தமிழக மக்களின் ஒன்றுபட்ட குரலைத் திரட்டுவதன் மூலம் இலங்கை தொடர்பான இந்தியக் கொள்கைகளை மாற்றுவதற்கான அழுத்தத்தையும், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக இலங்கை ஆதரவு நிலைபாட்டை இந்தியா எடுக்காது செய்வதிலும் இந்த அழுத்தத்தை நாம் பாவிக்க முடியும்.
செய்வோமா? இல்லையேல் அத்தகையதொரு கூட்டமைப்பை அமைத்திட இன்னமும் நூறு ஆண்டுகள் ஆகுமென்றால், அதற்கு முன் ஈழத் தமிழினம் முற்றும் அழிந்து விட்டிருக்கும். ஈழம் என்ற சொல் மறைந்து விட்டிருக்கும். ஈழம் வாழ்வதும், ஈழத் தமிழர்கள் விடுதலை பெறுவதும் எதிர்காலத் தமிழக விடுதலைக்கு முதலீடாகும் என்பதைப் புரிந்து கொள்வோமா?
தனித்தனியான உணர்ச்சிவசமான உரைவீச்சுக்களுக்குப் பதில், தெருமுனைக் கோஷங்களுக்குப் பதில் அரசு நிறுவனங்களையும், சர்வதேச நிறுவனங்களையும் நோக்கிய நிலைப்பாடுகளும், அதற்கான அரசியல் தந்திரோபாயங்களும் ஒருங்கிணைவும்தான் இன்று தேவை. அதனை நோக்கிப் புகலிடத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் திரள்வது மட்டுமே விடுதலை அரசியலை அடுத்த கட்டம் நோக்கி எடுத்துச்செல்லும்.
எனவே, இன்றே தமிழகத்தில் கூட்டமைப்பைக் கண்டிட அனைத்து தேசிய அமைப்புக்களும் முன்வாரீர். தலமையை கூடிப் பேசி இறுதி செய்வீர். போர்க்குற்றவாளிகளைக் கூண்டிலேற்றுவது, ஈழத்தின் விடுதலைக்கு வாக்கெடுப்பு ஆகிய முழக்கங்களில் முன்னது மட்டுமே இன்று வெப்பமடைந்துள்ளது. பின்னதை – ஈழ விடுதலைக்கு வாக்கெடுப்பு – என்பதையும் சேர்த்தே ஒலிப்போம், எதிரொலிப்போம் – தமிழம் முழுவதும் ஒரு குரலாய்…உலகத் தமிழர்களுடன் இணைந்த குரலாய்……தமிழகம் மாற வேண்டிய தருணமிது!
Filed under: உலகத் தமிழர் களம் | Leave a comment »